இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. "டாஸ்' ஜெயித்த இந்திய அணி கேப்டன் காம்பிர் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஸ்ரீசாந்த், ரெய்னாவுக்குப் பதில் ஜாகிர் கான் மற்றும் ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் ஜேமி ஹவ், சவுத்தி நீக்கப்பட்டு, பிரண்டன் மெக்கலம், பிராங்க்ளின் இடம் பெற்றனர்.
மெக்கலம் ஏமாற்றம்:
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம், கப்டில் துவக்கம் தந்தனர். முதல் ஓவரை ஜாகிர் வீசினார். இவர் வீசிய ஆட்டத்தின் 2 வது பந்திலேயே, டக்-அவுட்டாகி வெளியேறினார் மெக்கலம். வழக்கத்திற்கு மாறாக அதிரடி காட்டிய கப்டில் (12), காம்பிரின் துல்லிய "த்ரோவில்' ரன் அவுட்டானர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோஸ் டெய்லர் (4) சொதப்பினார். சற்று நேரம் தாக்குப் பிடித்த வில்லியம்சன் (21), ஸ்டைரிஸ் (22) ஓரளவு ரன்கள் சேர்த்து வெளியேறினார். மிடில் ஆர்டரில் கேப்டன் வெட்டோரி (3), ஹாப்கின்ஸ் (6) சோபிக்க வில்லை. நியூசிலாந்து அணி 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
பிராங்க்ளின் ஆறுதல்:
பின்னர் பிராங்க்ளின், மெக்கலம் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராங்க்ளின், ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் முதல் அரை சதம் கடந்தார். இவருக்கு நாதன் மெக்கலம் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க, நியூசிலாந்து அணி 200 ரன்களை கடந்தது. இந்த ஜோடி 8 வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில், நாதன் மெக்கலம் அவுட்டானார். இவர் 43 ரன்கள் (4 பவுண்டரி) சேர்த்தார். பின்வரிசையில் மில்ஸ்15 ரன்கள் சேர்க்க, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 224 ரன்கள் சேர்த்தது. 72 ரன்களுடன் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) பிராங்க்ளின் அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா தரப்பில் ஜாகிர், அஷ்வின், யூசுப் பதான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
காம்பிர் மிரட்டல்:
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு காம்பிர் அதிரடி துவக்கம் தந்தார். சேவக் இல்லாத குறையை நீக்கிய இவர், மெக்கே பந்து வீச்சில் "ஹாட்ரிக் பவுண்டரி' அடித்து அசத்தினார். தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த காம்பிர், 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். இவருடன் இணைந்த முரளி விஜய் வழக்கம் போல, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த நிலையில், விஜய் (30) அவுட்டானார்.
மீண்டும் சதம்:
நியூசிலாந்துக்கு எதிரான 2 வது போட்டியில் (ஜெய்ப்பூர்) சதம் அடித்து அசத்திய காம்பிர், நேற்றும் சதம் கடந்தார். இது ஒரு நாள் அரங்கில் இவர் அடிக்கும் 9 வது சதமாக அமைந்தது. மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த விராத் கோஹ்லி, ஒரு நாள் அரங்கில் 10 வது அரை சதம் கடந்தார். மெக்கே பந்து வீச்சில் ஒரு சூப்பர் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் கோஹ்லி. 39.3 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்த இந்திய அணி, 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. காம்பிர் 126 (16 பவுண்டரி) விராத் கோஹ்லி 63 (6 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை காம்பிர் தட்டிச் சென்றார். இவ்வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை தன்வசப்படுத்தியது இந்தியா. இவ்விரு அணிகள் மோதும் 4 வது போட்டி, வரும் 7 ம் தேதி பெங்களூருவில் நடக்க உள்ளது
No comments:
Post a Comment